– சு.அ. யாழினி
ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான். ஆனால் அவனுக்கு இடது கை இல்லை. அப்படியிருந்தும் அவனுக்கு மல்யுத்த விளையாட்டு கற்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை. அனைவரிடமும் கேட்டுப் பார்த்தான், மல்யுத்தம் கற்றுத் தருமாறு. ஆனால், யாரும் அவனுடைய பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு முன்வரவில்லை.
அப்பொழுது தான் இந்த விஷயத்தை அறிந்த ஒரு மல்யுத்த குரு, அந்த பையனை சந்தித்து நான் உனக்கு இந்தக் கலையை கற்றுக் கொடுக்கிறேன் என்று முழுமனதோடு சொன்னார். இதைக் கேட்டதும் அந்தப் பையன் மிகவும் களிப்புடன் இருந்தான்.
உடனடியாக அந்த பையன், தினமும் காலையில் மல்யுத்த பாடசாலைக்கு வந்து, குரு கற்றுக் கொடுக்கும் அனைத்தையும் நல்லமுறையில் கற்றுக்கொண்டு, செய்து பழகினான். காலங்கள் கடந்தது. ஒரு வருடம் ஆனது. அந்தப் பையன் ரொம்ப சோகமாக இருந்தான். குரு என்ன ஆயிற்று என்று கேட்டார்.
அதற்கு அவன், மல்யுத்தம் விளையாட்டில் எத்தனையோ கலை இருக்கிறது. ஆனால் நீங்கள் எனக்கு ஒரே ஒரு கலையை மட்டும் தான் கற்றுக் கொடுத்துள்ளீர்கள். இதை மட்டும் வைத்துக் கொண்டு நான் எப்படி போட்டிப் போடுவேன் என்று வருந்தினான்.
அதற்கு அந்தக் குரு, நான் கற்றுக் கொடுத்ததை மட்டும் பயன்படுத்தினால் எப்பொழுதும் நீ நல்வழிக்கே செல்வாய் என்று உறுதியாக சொன்னார்.
அதற்கு அவன் குரு சொல்லை மீறக் கூடாது என்ற எண்ணத்தில், அவர் வார்த்தையை தட்டவில்லை.
வருடங்கள் கடந்தது……. இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆனது. திடீரென ஒரு நாள் மல்யுத்தப் போட்டி ஒன்று அறிவித்தார்கள்.
அவனுடைய குரு சொன்னார். நீ எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றார்.
அதற்கு அவனும் தலை அசைத்து, நான் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவேன். ஒரு விதத்தில் அவனுக்க சந்தோஷம் கலந்தப் பயம் இருந்தது. ஆனால் தன்னுடைய நம்பிக்கையினால், அந்தப் போட்டியில் தைரியமாக கலந்துக் கொண்டான்.
அந்த போட்டியில் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றான். தகுதித் தேர்விலும் வெற்றிப் பெற்றான். பின் இறுதிச் சுற்றில் அவனுக்கு போட்டியாக நேரில் மோதுபவர் பெரிய மல்யுத்த வீரர் என்று கேள்விப்பட்டதும், தன் குருவிடம் எனக்குப் பயமாக உள்ளது. அதுவும் அவன் பெரிய மல்யுத்த வீரர், எனக்கோ இடது கையில்லை. எப்படி என்னால் வெற்றி பெற முடியும் என்று சிறு வருத்தத்தோடு கேட்டான்.
அதற்கு அந்தக் குரு கவலை வேண்டாம். நான் உனக்கு கற்றுக் கொடுத்த கலையை நீ பிரயோஜித்தால் போதும். உன்னால் முடியும் என்று நம்பிக்கையை ஊட்டினார்.
ஆனால், அந்த மல்யுத்த வீரரூக்கு தலைக்கனம் அதிகம் உள்ளத்தால், தன்னுடன் போட்டிப் போடும் அந்தக் கையில்லாத வீரனை பார்த்து, இவனா வெற்றி பெற போகிறான் என்று ஏளனமாக நினைத்தான்.
ஆனால் தன்னுடைய விடாமுயற்சினால் அவன் (கையில்லாதவன்) கற்ற கலையை பிரயோஜித்து, அந்த மல்யுத்த வீரனை வென்றான்.
இதனைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குரு அவனை நோக்கி, எனக்கு அப்பொழுதே தெரியும். நீதான் போட்டியில் வெற்றி பெறுவாய் என்று. ஏன் தெரியுமா… உனக்கு மூன்று வருடமாக ஒரே கலையைக் கற்றுக் கொடுத்தேன்…..
ஏனென்றால், இந்தக் கலை வலது கையில் தான் மிகவும் சக்தி அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி உனக்கு இடது கை இல்லை. ஒரே கையைக் கொண்டு சுலபமாக அவனை (எதிர் வீரர்) தோற்கடித்து விடலாம்.
நீதி: நம்மிடம் குறை இருந்தால் அதையே நினைத்து வருந்தக் கூடாது. நாம் ஏதாவது முயற்சி எடுத்து, மேலே வருவதற்கான வழியை நோக்கிப் போக வேண்டும். அப்பொழுது தான் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சாதிக்கலாம்.
– கதைப் படிக்கலாம் – 159