– ஆர்த்தி

எல்லாக் கதைப்போல தான், நாங்கள் அரவிந்த் கதையையும் கேட்டோம். அப்போ அவன் சொன்னது என்னை அவ்வளவு பாதிக்கல, ஒரு சாதாரண மனுஷனோட ஒருதலைக் காதல் கதை. அரவிந்த் ஒரு பட்டதாரி இளைஞன். எல்லோர் போலவும் படிச்ச படிப்புக்கு வேலையில்லாம, ஏதோ கெடச்ச வேலையப் பாத்துக்கிட்டு இருந்தப்போ நடந்த ஒரு சம்பவம். அத தான் அவன் எங்க கிட்ட பகிர்ந்துக்கிட்டான்.
நான் வேலை செய்யுற வானொலி நிலையத்துல, ஒரு புது நிகழ்ச்சி ஒன்னு அறிவிச்சாங்க. “சொல்ல மறந்தக் கதை” என்ற தலைப்பில், பொதுமக்கள் தாங்கள் இது வர சொல்லணும்னு நெனச்சு, சொல்ல முடியாமப் போன ஏதாச்சும் நினைவுகள் இருந்தா, அத அவங்கக் குரலிலேயே எங்களுக்கு அனுப்பி வைக்கணும். அதுல வித்தியாசமா இருக்கற, சுவாரசியமா இருக்கற கதைகளை, நாங்க எங்க நிலயத்துல பதிவிடுவோம். அதுல சிறந்ததுக்கு பரிசும் உண்டு. அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு கதை தான், அரவிந்தின் வாழ்கை நிகழ்வு.
காதல் என்பது வெகு இயல்பா எல்லாருக்கும் வர்ற ஒன்னு தான். அவன் காதலோ ஒருதலை காதல். அவன் வேலை பார்த்த அலுவலகத்துக்கு எதிரில் ஒரு வீடு. அங்கு ஒரு குடும்பம். அதில் அப்பா, அம்மா, இரு வயது வந்த சகோதரிகள்.
ஆண் பிள்ளை இல்லாததால், இருவரையும் ஆண் பிள்ளைகள் போல கம்பீரமாய் வளர்த்திருந்தார் தந்தை. அவர்கள் இருவரில் பெரியவள் உள்ளூரில் வேலைப் பார்க்க, சின்னவள் வெளியூரில் படித்துக்கொண்டு இருந்திருக்கிறாள். இவை அரவிந்த் சொன்னதில் தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட விவரம். ஏன் எதை எதையோ சொல்லி நேரத்தை வீணாக்குகிறான் என்று சற்று எரிச்சல் இருந்தும், அவன் குரல் எல்லோரையும் என்னவோ மேலும் கதைக் கேட்க வேண்டும் என்று தோன்ற வைத்தது.
குரலின் இனிமை… பொறுமை… சொற்களின் நிதானம்… நிச்சயம்… ஒரு நடுத்தர வயதான… அதாவது ஒரு 26 முதல் 28 வரை இருக்கலாம் என்று தோன்றியது. ஒரு சில கதை நம் வாழ்வோடு சம்மந்தப்பட்ட நிகழ்வை ஞாபகப்படுத்திவிடும். அதுபோல இதுவும். அதனால், என்ன தான் கதையோ என்று தொடர்ந்துக் கேட்டோம்.
அவன் சொன்ன விவரம் ஏன் என்று புரிந்தது. வீட்டின் மூத்த பெண் மீது காதல், அந்த பெண் பொறுப்பாளி! வேளைக்குச் சென்றுப் பெற்றோருக்கு உதவியாய் இருக்கிற ஒரு சாதாரணப் பெண். ஆண் போன்ற மிடுக்கு, யாரையும் கேள்விக் கேட்கும் குணம்! ஆனால் பெண்மைக்குரிய சிகை அலங்காரத்தில் கவனம். இவை அவளைப் பார்த்து அவன் வியந்த, தோற்ற விரிவாக்கம். இக்கதையின் முக்கிய அம்சம், அவன் பலமுறை அவளைப் பார்த்திருக்கிறான். ஆனால் அவள் ஒரு முறையேனும் கூட, அவனைப் பார்த்ததே இல்லையாம். ஏறிட்டுப் பார்க்காத குணம் தான் ஈர்த்ததாய் கூறினான்.
அவளிடம் காதல் வயப்பட்டாச்சு. ஆனா காதலை சொல்லணும், எப்படி என்று யோசிச்சுக் கொண்டு இருக்கும் போது, வாழ்வின் அடுத்தக் கட்டம் வந்ததாம்! அவன் எதிர்பார்த்த வேலை, எதிர்பார்த்த இடம் மற்றும் சம்பளம். ஒரு ஆணிற்கு அடையாளம்… நல்ல வேலை, நியாயமான சம்பளம் தானே என்று அசட்டுத்தனமாய் ஒரு சிரிப்பு வேறு செய்துவிட்டு, மேலே தொடர்ந்தான்.
வேளைக்குச் சென்ற இடத்தில் நல்லபடியாக இருக்க, பதவி உயர்வு, சொந்த வீடு, கார் என்று வாழ்கை சூழல் மாறியது. மனம் என்னவோ அந்தப் பெண்ணை நினைத்துக்கொண்டு இருந்தது. ஆனால் அறிவு, வேலையில் வெற்றி வந்தால் வாழ்கை வெற்றி என்று கூறியது. அப்படினு அவன் சொல்லி, ஆங்காங்கேயே சில தத்துவங்களையும் வாரி வழங்கினான்.
கடைசியாய் என்னதான் கதை… வேலை, வீடு என்று வாழ்கை கிடைத்தப் பிறகும்… ஏன் அவன் காதலை சொல்லவில்லையாம்? என்று இருந்தவர்கள் அனைவருக்கும் தோன்றிவிட்டது. அவன் காதலைச் சொல்ல அந்தப் பெண் வீட்டிற்கு சென்றபோது, அங்கு யாரும் இல்லை. குடும்பம் முழுதும் புயல் மழையில் சிக்கி, அவள் பெற்றோரை இழந்து, இரு பெண்கள் தனியாய் இருந்திருக்கிறார்கள். உறவு என்று சொல்லிக்கொள்ள தங்கை மட்டும்தான் என்ற நிலையில், அவளை கூட்டிக்கொண்டு பட்டணம் சென்றுவிட்டாள் தம்பி! என்று அங்கு இருந்தவர்கள் கூறினார்களாம்.
“எங்கு சென்று தேடுவது என்று தெரியாமல் தான், காதலை சொல்ல முடியவில்லை போல”! என்று அனைவரும் வருந்தினார்கள். ஆனால் அது அல்ல, விதி அவளை அவன் இருக்கும் ஊருக்கே அழைத்து வந்திருக்கிறது. ஒரு மளிகைக் கடையின் நுழைவாயிலில் அவள் முகம் தெரிய அவளைப் பார்த்ததும், உற்சாகம் பொங்கியதாம். உடனே அவளிடம் காதலைச் சொல்லி ஒன்று சேர வேண்டும் என்று துடித்தானாம். ஆனால் அதற்குள் அவள் அங்கு இருந்து சென்றுவிட்டாளாம். எப்படியோ அவளைப் பின் தொடர்ந்து, அவள் வேலை செய்யும் அலுவலகம் வந்து சேர்ந்தானாம்.
நேரே சென்றுக் கேட்டு மறுத்துவிட்டால்! இனி தங்கைக்காகத்தான் வாழப்போவதாக அவள் ஊரில் கூறிவிட்டு சென்றது நினைவில் வர, சற்றுக் குழப்பமும் வந்தது. “மறுத்துவிடுவாள் என்றப் பயத்தில் தான் காதலை கூறவில்லையா?” என்று அனைவரும் நினைத்துக் கொண்டனர். ஆனால் என் மேஜை மேலே இருந்த புத்தம் புதிய ரோஜா பூக்கள் காதல் வாசம் வீசியது. யாரோ எனக்காக அளித்த பரிசு. ஒரு ரோஜாவை எடுத்து ஒற்றை வார்த்தையில் கூற வேண்டியது தானே! என்று எனக்கு தோன்றியது.
அவன் ஒரு வழியாக கடைசியாய் என்னதான் செய்தான் என்று கூறினான். அதற்கு முன்பு அந்த பெண்ணின் பெயர் என்ன என்று கூறினான். அவள் பெயர் ஆதிரா… ஊர் முட்டம்… தங்கை பெயர் அவந்திகா…! என்றதும், அங்கு இருந்தவர்கள் என்னைத் தான் பார்த்தார்கள். ஆம்! அவன் கூறியது என் பெயர், என் ஊர். இதுவரை அவன் கூறியது அனைத்தும் என்னைப் பற்றித்தான்.
வில் யு மேரி மீ? என்று நேரில் பார்த்துக் கூறுகிறேன். அதுவரை, உங்க மேஜை மேல் உள்ள பூவும் நானும் காத்திருப்போம் என்று கூறி, அவன் ஆடியோ கிளிப்பிங்கை முடித்திருந்தான்.
இதை விட ஒருவன் எளிமையாய், அழகாய் காதலைச் சொல்ல முடியாது என்று அனைவரும் என்னைப் பார்த்து உற்சாகத்தில் கூறினார்கள். அவனைப் பார்க்க போ! போ! போ! என்று என்னை வற்புறுத்தினார்கள்!.
நான் வெளியே சென்றேன்! ஆறடி உயரம்… அளவான உடம்பு… மிடுக்கான உடை அணிந்து… எனக்காகக் காத்திருந்தான். என்னை பார்த்ததும் “விட்ட இடத்தில இருந்து தொடரலாமா என்றுக் கேட்டான்”.
தொடரலாமா?????……
– கதைப் படிக்கலாம் – 46
இதையும் படியுங்கள் : சம்ஸ்காரம்




