நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் 5 மாத குழப்பத்திற்குப்பின் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாளை மறுநாள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், குறைக்கப்பட்ட 40 சதவீத பாடத்திட்டம் குறித்த அறிவிப்பை மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், இயக்குனர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொள்வார். அதன்படி பாடத்திட்டம் குறைப்பு குறித்த பரிந்துரை கடந்த நவம்பரில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த 6 மற்றும் 7ம் தேதி பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதன் அடிப்படையில், நாளை மறுநாள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் குறைக்கப்பட்ட 40 சதவீத பாடங்கள் எவை, பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் படிக்க வேண்டிய பாடங்கள் எவை என்பது குறித்த முழு அறிவிப்பை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேலாக குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களுக்கும் எந்த படத்தை நடத்துவது என்று தெரியாமல் குழப்பமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த சூழலில், 5 மாதங்களுக்குப் பின்பு தற்போது இந்த அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்வுக்க்கும், செய்முறை தேர்வுக்கும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடங்கள் குறித்த முழு அறிவிப்பு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.