தேசிய திறனாய்வு தேர்விற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய திறனாய்வு தேர்வு
2020-2021ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2020 டிசம்பர் மாதம் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/என்ற இணையதளம் மூலம் 21.11.2020 முதல் 30.11.2020 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11.2020. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
அறிவுரை
தேர்வர்கள் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.