பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புத்தகப்பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மையமாகக் கொண்டு, மாணவர்களின் புத்தக பையின் சுமையை குறைக்கும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி பை கொள்கையை வகுத்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, புத்தக பைகளின் அதிகபட்ச எடை மாணவரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். அவற்றை, பள்ளிகள் சீராக கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன்மீது அச்சிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு இரட்டை புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும், பள்ளிகளில் லாக்கர்கள் வசதியை ஏற்படுத்த வேண்டும், மாணவர்கள் சக்கர கேரியர் அல்லது டிராலி பேக் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாட புத்தகங்களுடன், பிற புத்தகங்களை வாசிப்பதற்கான நேரத்தையும், மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது, தரமான மதிய உணவு, பள்ளிப் பையில் தண்ணீர் பாட்டிலை சுமந்து செல்வதைத் தவிர்ப்பதற்காக அல்லது அதன் அளவைக் குறைப்பதற்காக பள்ளியிலலேயே தரமான குடிநீரை வழங்குவது பள்ளி நிர்வாகத்தின் கடமை மற்றும் பொறுப்பும் என, மத்திய அரசின் பள்ளி புத்தகப்பை கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.