பொது இடங்களில் இலவச வைபை வசதியை வழங்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம், கொரோனா தடுப்பூசி விநியோகம் போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,
பொது இடங்களில் வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறினார். எந்தவொரு கட்டணமும் விதிக்காமல் வைஃபை வசதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், PM WANI என்ற பெயரில் வைஃபை வழங்கும் திட்டத்தை செய்லபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே, இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தேசிய சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளது.
உலகின் மொத்த சாலை விபத்துக்களில் 11 சதவிகிதம் இந்தியாவில் நடக்கிறது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.14 சதவிகித இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் நோக்கில், சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆணையம் உதவிகரமாக இருக்கும். போக்குவரத்து துறை நிபுணர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு நிபுணர்கள் இந்த ஆணையத்தில் இடம் பெறுவார்கள்.
சாலை மற்றும் வாகன போக்குவரத்து பாதுகாப்பு, வாகனப்பதிவு முறைகள் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு அவர்கள் ஆலோசனை கூறுவார்கள் என கூறப்படுகிறது.