பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் ஆகஸ்டு 18ம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்யப்படும் என்றும் அண்ணாப்பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதன்படி புதிய பொறியியல் பாடத்திட்டம் ஆகஸ்டு 18ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்துக்கு ஆகஸ்டு 12ம் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பு, தனிதிறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், தொழில் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணருதல், தொழில்முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுவதாக விளக்கமளித்துள்ளது.




