சுமார் 300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை வெறும் 40 நிமிடத்தில் பத்திரமாக மீட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள கிராமம் துடாபூர். இங்கு கூலித் தொழில் செய்து வரும் தம்பதியின் 2 வயது மகன் சிவம், குடும்பத்தினர் வசிக்கும் இடத்துக்கு அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கே இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சிவன் தவறி விழுந்துவிட்டான். இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் போலீசாருக்கு புகார் கொடுத்தனர். அவர்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
அதையடுத்து குழந்தை விழுந்த சில மணிநேரத்தில் உள்ளூர் பேரிடர் மேலாண்மை மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து ராணுவத்தினரும் துடாபூர் கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
300 அடி ஆழத்துக்குள் 25 அடி-யில் சிக்கிக் கொண்டிருந்த குழந்தை மீட்க அனைவரும் துரிதமாக செயல்பட்டனர். மீட்புப் பணி துவங்கப்பட்ட 40 நிமிடத்தில் குழந்தையை அவர்கள் பத்திரமாக மீட்டனர். உடனடியாக குழந்தை அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.