ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால் மற்றும் குடிநீரில்கலந்து இருந்த உலோகத்தன்மையே காரணம் என்று எய்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
ஏலூர்:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள ஏலூரில் கடந்த 4ம் தேதி முதல் பள்ளி குழந்தைகள்,பெற்றோர்கள்,வயதானவர்கள் என்று அனைவரும் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தனர்.அதனை தொடர்ந்து அடுத்தடுத்த 2 நாட்களில் 400 க்கு அதிகமானோர் இந்த மர்ம நோயினால் பாதிக்கப்பட்டு ஏலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நோயின் தன்மையால் பாதிக்கபட்டவர்கள் வித்தியாசமான முறையில் குரல் எழுப்பியும்,கை மற்றும் கால்கள் வீங்கியும் உள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து,நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலநானி நேரில் சென்று அவர்களை நலம் விசாரித்தனர்,மேலும் நோயின் தன்மை குறித்து கண்டறியவும்,இந்த நோய் உடனடியாக குணப்படுத்த முயற்சி செய்யவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பெயரில்,அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் நடத்திய ஆய்வின்படி,பாதிக்கப்பட்டவர்கள் அருந்திய பால் மற்றும் குடிநீரில் காரீயம், நிக்கல் போன்ற கன உலோகங்கள் கலந்து இருந்ததே இந்த நோய்க்கான காரணம் என அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த மர்ம நோயினால் இதுவரை 570க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 493 குணமாகி உள்ளனர்,மீதம் உள்ள 77 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இந்த நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.