திரையரங்குகள் பார்வையாளர்களை அனுமதிப்பதில் முறையான விதிகளை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தணிக்கை குழு எச்சரித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை திரைப்படங்களுக்கு மூன்று விதமான தணிக்கைகள் வழங்கப்படுகின்றன. அவை U, UA, A ஆகியவை ஆகும். இதில் U சான்றிதழ் கொண்டு தணிக்கை செய்யப்படும் படம் என்றால் அதை அனைத்து வகையினருமான பார்வையாளர்களும் பார்க்கலாம்.
ஒருவேளை UA சான்றிதழ் கொண்ட படம் என்றால், 18 வயதுக்கு உட்பட்டோர் பெற்றோர் அனுமதியுடன் பார்க்கலாம். ஆனால் A சான்றிதழ் கொண்டு தணிக்கை செய்யப்பட்ட படம் என்றால், அதை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும்.
ஆனால் இந்த விதிகளை திரையரங்குகள் பெரும்பாலும் முறையாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் இவ்விவகாரத்தில் கண்டிப்பு காட்டியுள்ளது.
அதன்படி இனிமேல் திரையரங்குகள் விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து திரையரங்குகளுக்கு தணிக்கை வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறினால் திரையரங்க நிர்வாகத்தினர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.