உலகப் புகழ்மிக்க மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவுக்காக மதுரை நகரம் முழுவதும் கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் பண்டிகைகள், கொண்டாட்டங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் உலகளவில் பிரசித்திப் பெற்ற மதுரையின் சித்திரை திருவிழாவும் நடைபெறாமல் போனது.
கடந்த இரண்டாண்டுகளாக கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைமுறைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் சித்திரை திருவிழா நடப்பாண்டில் நடைபெறுகிறது. மொத்தம் 12 நாட்கள் திருவிழா நடக்கவுள்ளது.
இன்று கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து காலை, இரவு என இருவேளைகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏப்ரல் 12ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்ரல் 13ம் தேதி திக்விஜயமும் நடைபெற உள்ளது.
வரும் ஏப்ரல் 14-ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடக்கவுள்ளது. திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்கள் ரூ. 200 மற்றும் ரூ. 500 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யலாம். அதேபோன்று தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.