சூனியம் எடுப்பதாக கூறி பெண் ஒருவரை சூனியக்காரி இரும்பு கம்பியால் குத்தி கொடுமை செய்துள்ளார்.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள குண்டியா கிராமத்தில் வசித்து வரும் 40 வயது பெண் ஒருவர் தனது வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளார். இதையடுத்து உறவினர் சிலர் கூறிய யோசனையின்படி ஊரில் மாந்தீரிகம் செய்யும் பெண் சந்தோஷி தேவி என்பரை சென்று பார்த்து தன் கஷ்டங்கள் குறித்து அவரிடம் புலம்பியுள்ளார். இதை அனைத்தையும் கேட்ட சந்தோஷி தேவி உங்களது உடலில் யாரோ சூனியம் வைத்துள்ளனர். அதை எடுத்து விட்டால் நீங்கள் சந்தோசமாக வாழலாம் என கூறியுள்ளார். இதைகேட்ட அந்த பெண்ணின் உறவினர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து சூனியம் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருகில் உள்ள கோவிலில் செய்தனர்.

பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்த பின் அங்கு வந்த மந்திரவாதி அந்த பெண்மணியை தரையில் படுக்க வைத்து சில பூஜைகள் செய்தார். அதன்பின் பழுக்க காய்ச்சிய கம்பியால் அந்த பெண்ணின் உடலின் பல பகுதியில் குத்தியுள்ளார். அதனால் வலியால் அலறி துடித்த அவர், சில நிமிடங்களில் அங்கேயே மயங்கினார். இதையடுத்து, அருகில் இருந்த உறவினர்கள் அவரை ஷாஹ்புரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் அவர் பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இச்சம்பவத்தை கேள்வியுற்ற போலீஸார் அப்பெண்ணின் உறவினர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.




