கொரானாவின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர நாடே போராடிக் கொண்டு இருக்கும் வேளையில் பறவைக் காய்ச்சலும் தாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
H5N1 வைரஸ் எனப்படும் “பறவை காய்ச்சல்” இந்தியாவில் கேரளாவில் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லி,சத்தீஸ்கர்,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவைகள் இறந்து கிடைப்பதை உறுதி செய்த மாநில அரசு அதனை பரிசோதனைக்காக அனுப்பியது. அந்த சோதனை முடிவில் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த பறவைகளில் H5N1 வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவிய மாநிலங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை இந்த காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை ஏற்கனவே பெரிய இறைச்சி கூடங்கள் 10 நாட்களுக்கு மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பறவைக் காய்ச்சல் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழகத்தில் முட்டைகளும் தேக்கம் அடைந்து வருகிறது.