குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்ற சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிரான வழக்கின் மேல் வருகின்ற அக்.26 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விசாரணை நடத்தப்படவுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா என்னும் இடத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, குஜராத் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறைகளில் 68 பேர் கொல்லப்பட்டனர். அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரியும் கொல்லப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டு கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த வன்முறையின் பின்னணியில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி மற்றும் உயர்அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
இதனையடுத்து,கலவரம் தொடர்பாக விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி,காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 63 பேர்கள் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இதனை எதிர்த்து,முன்னதாக ஜக்கியா ஜாப்ரி என்பவரும், சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இதன்மீதான விசாரணை தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,பிரதமர் மோடி குற்றமற்றவர் என்ற சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிரான வழக்கை வருகின்ற அக்.26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது.




