இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று அக்டோபர் 6ம் தேதியான இன்று உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக,தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் 17,130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் 6-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இன்று -காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இறுதி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியே வந்து வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.