பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக்கத்தைக் சேர்ந்த, மாரியப்பன் உட்பட 5 பேருக்கு மத்திய அரசு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது.
ஹாக்கி விளையாட்டில் இந்திய ஜாம்பவான் மேஜர் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி, தேசிய விளையாட்டு தினமான கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில், விளையாட்டுத்துறையில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டில் இந்த விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க சேவக், சர்தார் சிங், தீபா மாலிக் உள்ளிட்ட 12 பேர் கொண்ட தேர்வுக்குழு கூட்டம், சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ‘பாரா’ தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, பெண்கள் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோருக்கு ‘கேல் ரத்னா’ விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய விளையாட்டு அமைச்சகம், நாட்டின் உயரிய ‘கேல் ரத்னா’ விருதுக்கு ரோகித் சர்மா (கிரிக்கெட்), மாரியப்பன் (தடகளம்), ராணி ராம்பால் (ஹாக்கி), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகத் (மல்யுத்தம்) என, 5 பேருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில், 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றதை கவுரவிக்கும் வகையில் தமிழகத்திக் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் முதன்முறையாக ஒரே ஆண்டில் 5 பேருக்கு ‘கேல் ரத்னா’ விருது வழங்கப்படுகிறது.