ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில், எச்சரிக்கை வாசகங்களை சேர்த்து வெளியிட , தனியார் தொலைக்காட்சிகளுக்கு, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவோர், அதற்கு அடிமையாகி நிதி இழப்பு போன்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால், பலர் தற்கொலை செய்துகொள்வது போன்ற சம்பவமும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வருகிறது. இதனால், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் ஆகியவை அடிப்படையில், நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக, ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான ஒளி, ஒலிபரப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து, மத்திய அரசு, தனியார் செயற்கை கோள் தொலைக்காட்சிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில்:ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில், 18 வயதுக்கு குறைவானோர், அதுபோன்ற தோற்றம் அளிப்பவர் பங்கேற்க கூடாது. விளம்பரத்தின், 20 சதவீத இடத்தை, இது தொடர்பான அபாயங்களை சுட்டிக்காட்ட பயன்படுத்த வேண்டும். இந்திய விளம்பர தரநிர்ணய குழு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், இந்த விளையாட்டில் நிதி அபாயம் உள்ளது; இது அடிமையாக்கக்கூடியது’ என்ற, எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளில், வருவாய், வேலை வாய்ப்பு என்று பொருள்படும் வகையில் விளம்பரங்கள் இருக்க கூடாது எனவும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.