இந்தியாவில் இருந்து அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், வடமாநிலங்களில் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, வெங்காய விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த மாதம் வெங்காய மொத்த விற்பனை விலை 35 சதவிதமும், சில்லறை விற்பனை விலை 4 சதவிதமும் சரிந்தது. அதேசமயம், கடந்த சில கடந்த சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியானதில் சுமார் 50 சதவீதம் முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் வங்கதேசத்திற்கான வெங்காய ஏற்றுமதி 158 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.
எனவே விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வகையான வெங்காயம் எற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குநரகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு, விலை ஏற்றத்தை தவிர்க்க இருப்பு வைக்கவும் தடை விதித்தது. அதைதொடர்ந்து, மார்ச் 15 முதல் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வந்த நிலையில், மீண்டும் ஏற்றுமதிக்கு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.