இந்தியாவில் அக்டோபர் – நவம்பரில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு விடும் என ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது.
இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிககாரி அடர் பூனாவாலா ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாடினார்.

அப்போது அடர் பூனாவாலா பேசிய போது, ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து முதற்கட்ட பரிசோதனையில் வெற்றிகரமான முடிவைத் தந்துள்ளது. இரண்டாம் கட்ட பரிசோதனை ஆகஸ்ட் மத்தியில் மேற்கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து இந்தாண்டு இறுதிக்குள் அதாவது அக்டோபர் நவம்பருக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும். ஒடிசா அரசுடன் இணைந்து இந்த மருந்து சந்தைப்படுத்தப்படும்” என அவர் கூறினார்.

”கொரோனா தடுப்பூசியை சந்தைப்படுத்தும் உரிமம் கிடைத்த உடன் ஒடிசாவுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும்” என நவீன் பட்நாயக் அடர் பூனாவாலாவை கேட்டுக் கொண்டார். இதற்கிடையே இந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ‘பிபிவி 152 கோவிட்’ தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான தேர்வு நடவடிக்கைகளை ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் துவக்கியுள்ளது.