பழங்குடியினச் சிறுமிகளை பாலியல் வன்கொடுகை செய்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த 3 பேருக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் கோக்ரஜார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், கடந்தாண்டு ஜூன் 11-ம் தேதி அபயக்குடி கிராமம் பகுதியிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்களை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்மூலம் இரு சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 6-ம் தேதி அவர்கள் மூவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.
தற்போது குற்றவாளிகள் மூவருக்கும் தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி சதுர்வேதி உத்தரவிட்டார்.