ஆணாக மாறுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வீட்டை விட்டு ஓடி வந்த கல்லூரி மாணவியை காதலியுடன் சேர்த்து காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரியில் படித்து வரும் இரண்டு மாணவிகள், கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீடு திரும்பாமல் இருந்துள்ளனர். இதனால் கவலை அடைந்த இருவீட்டைச் சேர்ந்த பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இரு மாணவிகளும் தங்களுடைய செல்போன்களை லாடபுரத்திலுள்ள மாணவனிடம் கொடுத்துவிட்டு, அவர் பயன்படுத்தி வந்த கைப்பேசியை பெற்றுச் சென்றது தெரியவந்தது.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு பெண்களும் சென்னை போரூர் ஓம்சக்தி நகரிலுள்ள வீட்டில் தங்கி இருக்கும் விபரம் தெரியவந்தது. அங்கு சென்று சம்மந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரித்த போது, இருவரும் 6-ம் வகுப்பு முதல் காதலித்து வந்தது தெரியவந்தது.
அதில் ஒரு மாணவி ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்துள்ளார். அதற்காக சென்னை வந்துள்ளனர். இதையடுத்து இரண்டு பேரிடமும் வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர், அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.