சென்னை மக்களிடையே பிரபலமாக திகழ்ந்து வரும் உணவகத்தின் பிரியாணி உணவில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அடையாளம் சேர்ப்பவையில் ஒன்று புஹாரி ப்ரியாணி உணவகம். சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இந்த உணவகம், அந்நகரத்தை ஓட்டியுள்ள மற்ற மாவட்ட எல்லைகளிலும் உண்டு.
சென்னை துரைப்பாக்கத்திலுள்ள புஹாரி உணவகத்துக்கு வந்த தம்பதிகள் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். சர்வர் வந்து வைத்த போது, அதில் கரப்பான் பூச்சி செத்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்பு துறைக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், உணவகத்தின் சமையலறைக்குள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அங்கு விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் பாதுகாப்பில்லாத வகையில் உணவுகள் சமைக்கப்படுவது தெரியவந்தது. மேலும் உணவு சமைக்கும் பகுதியைச் சுற்றிலும் கரப்பான் பூச்சிகள் இருப்பதை கண்டு அதிகாரிகள் கூடுதலாக அதிர்ச்சியுற்றனர்.
இதையடுத்து துரைப்பாக்கம் புஹாரி உணவகம் மூடப்பட்டது. உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக உணவு சமைக்கப்படுவதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புஹாரி நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். அதை தொடர்ந்து தான் கடை மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
விதிமுறைகளை பின்பற்றாமல் உணவு சமைத்த புஹாரி உணவகத்துக்கு அதிகாரிகள் ரூ. 5000 அபராதம் விதித்தனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்தது புஹாரி உணவகம் ஆகும். அங்கு அவர் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் ப்ரியாணி சாப்பிட்டு டீ சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.