கோவில் பிரசாதத்தை வீட்டில் கொடுத்து விடுங்கள் என அரசுப்பேருந்தின் உதவி மூலம் பல மாநிலங்களுக்கு பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருளை கடத்திய வடமாநில இளைஞர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் அதிகளவு பிரவுன் சுகர் சப்ளை செய்யப்படுவதாகவும், மேலும் மர்ம நபர் போதைப்பொருட்களை ஹெல்மெட்டில் வைத்து கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பெங்களூரு மேற்கு மண்டல காவல் துறையினர், மப்டியில் மார்க்கெட் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது, வடமாநில இளைஞர் ஒருவர் பைக்கில் வைத்திருந்த ஹெல்மெட்டில் பிரவுன் சுகரை கடத்தி வந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அவரிடம், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் பெங்களூரு, கிரிநகரை பகுதியை சேர்ந்த 25 வயதான வடமாநில இளைஞர் விக்ரம் கிலோரி என்பது தெரியவந்தது.

மேலும் இவர் பல மாதங்களாக அரசுப் பேருந்துகளில் உள்ள ஓட்டுநர்களிடம் இது கோவில் பிரசாதம் இதை எனது உறவினர் வந்து பெற்றுக் கொள்வார்கள் என 100 ரூபாய் கொடுத்து பல மாநிலங்களுக்கு கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் இதே போல கோவில் பிரசாதம் என பல மாதங்களாக கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடமிருந்து சிறிய சிறிய பொட்டலங்களாக 90 கிராம் பிரவுன் சுகர், 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.




