புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதின் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதினால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
இதன்படி, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்துவது என்றும், மற்ற நாட்களில் கடைகள் காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்க்ப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி புதுச்சேரி மாநிலத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்த ஊரடங்கின்போது பால் பூத்துகள், மருந்துக் கடைகள் மட்டும் திறந்து இருக்கும். கியாஸ் வினியோகம் செய்யலாம். பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடி இருக்கும். தேவையில்லாமல் வெளியில் நடமாடும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.