கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த பிறகு தான் கோவா திரைப்பட விழா நடத்துவதை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றி நவம்பர் இறுதியில் திரைப்பட விழா நடத்தப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறி இருந்தார். ஆனால் கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் திரைப்பட விழா திட்டமிட்டபடி நடக்குமா என்பது கேள்வியாகவே உள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் ம.தி.மு.க உறுப்பினர் வைகோ மற்றும் சுரேஷ் ரெட்டி ஆகியோர் திரைப்பட விழா நடக்குமா? என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. அதில், கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த பிறகு தான் நவம்பரில் திரைப்பட விழா நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.