டெல்லி ஜாம் போராட்டத்தில் டெல்லி காவல்துறைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆணிக்கு பதிலாக பூச்செடி நட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி :
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் எனப்படுவது சக்கரங்களை நிறுத்துதல் என்ற பெயரில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சிங்கு, சிக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் டெல்லிக்குள் ஊடுருவுவதை தடுக்க எல்லை பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், முள்வேலிகள் உள்ளிட்ட பல்வேறு தடுப்புகளை டெல்லி போலீசார் அமைத்துள்ளனர்.
இந்தநிலையில் காசிப்பூர் எல்லை பகுதியில், தரையில் ஆணிகளைப் பதித்த டெல்லி காவல்துறைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆணிகளுக்கு அருகே விவசாயிகள் பூச்செடிகளை நட்டு கையெடுத்து கும்பிட்டனர். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ரமேஷ் திகைத், “காவல்துறை விவசாயிகளுக்காக இரும்பு ஆணிகளைப் பதித்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களுக்காக இந்த பூக்களை நட்டு இது அவர்களுக்கான போராட்டம் என்பதையும் உணர்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்தான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பலரது பாராட்டுகளையும், ஆதரவையும் பெற்று வருகிறது.