இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான BECA எனப்படும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
உலக வல்லரசான அமெரிக்கா இருந்த இடத்தில் இருந்தே பல நாடுகளையும், அவற்றின் எல்லைகளையும் கண்காணித்து, அதற்கு எதிரான அசைவுளை கண்காணிக்கும் வகையிலான செயற்கைகோள் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. வேறு எந்த நாடுகளிடமும் இல்லாத அளவிற்கு துல்லியமான பாதுகாப்பு தரவுகளையும் அமெரிக்கா கொண்டுள்ளது. அந்த பாதுகாப்பு அம்சங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் இந்தியா- அமெரிக்கா இடையேயான வெளியுறவு துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தையானது மூன்றாவது ஆண்டாக நேற்று நடைபெற்றது. இதற்காக இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேசினார். இதேபோல், அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர், அமைச்சர் ராஜ்நாத் சிங்கையம் சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளையும், பாதுகாப்பில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதைதொடர்ந்து, இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான BECA ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரைப்படங்கள், செயற்கைக்கோள் தரவுகள் உட்பட முக்கியமானவற்றை இருநாடுகளும் பரிமாறி கொள்ளும். இதன் மூலம் அமெரிக்கா செயற்கைக்கோள் மூலமாகவும், அமெரிக்க தொழில்நுட்பம் மூலமாகவும் இந்தியாவிற்கு பாதுகாப்புகள் எப்படி இருக்கிறது. எதிரிகள் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு நகர்கிறார்கள் என்பதை துல்லியமாக கவனித்து தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிற்கு கிழக்கு எல்லையில் சீனாவோ அல்லது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானோ நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அதனை கண்டறிந்து துல்லியமாக தாக்குதல் நடத்தலாம்.
தற்போதைய நிலையில், பாதுகாப்பு துறையில் இந்தியா பல்வேறு சோதனைகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது முக்கியத்துவமாக வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக அரசாங்கங்களால் பயன்படுத்தப்படும், புவிசார் புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்வது தான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், புவிசார் உளவுத்துறை தகவல்களை இந்தியாவுடன் அமெரிக்கா பரிமாறிக்கொள்ளும். இதன் மூலம் எல்லையில் சீனா குவிக்கும் ஆயுதங்கள் மற்றும் ராணுவ வீரர்களின் உண்மையான நிலவரம், பாகிஸ்தானிற்குள் செயல்படும் தீவிரவாத பயிற்சி மையங்கள், அந்நாட்டு ராணுவ செயல்பாடுகள் மற்றும் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறும் அண்டை நாடுகளின் நடவடிக்கைகள் போன்றவற்றை இன்னும் துல்லியமாக கண்டறிந்து இந்தியாவால் பதில் நடவடிக்கை எடுக்க முடியும்.
அமெரிக்கா இந்த தரவுகளை தனது நேட்டோ நட்பு நாடுகளுக்கு மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது இந்தியா இந்த தரவுகளை முழுமையாக பயன்படுத்த அனுமதிப்பது, இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.