மணமேடையில் போட்டோகிராபர் அடிவாங்கிய வீடியோ உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அண்மையில் வீடியோ ஒன்று வைரலானது. மணமகனை ஓரங்கட்டிவிட்டு, மணமகளை மட்டும் போட்டோகிராபர் வளைத்து வளைத்து போட்டோக்களை எடுத்து தள்ள, இதில் செம காண்டான மாப்பிள்ளை, போட்டோகிராபரை அடித்து விட்டார். இதனை எதிர்பார்க்காத மணப்பெண், மணமேடையில் விழுந்து விழுந்து சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களுக்கு சிரிப்பை வரவழைத்துள்ளது. ஆனால் இந்த வீடியோ சிலருக்கு ஆச்சரியத்தையும் தந்தது.

திருமணம் செய்யப்போகும் கணவரின் செயலைக்கண்டு மணமகளும் கோவப்படவில்லை, போட்டோகிராபரும் கோப்படவில்லையே என்று. இந்தநிலையில் தான் அந்த திருமணமே உண்மையில்லை என்று தெரிய வந்து இருக்கிறது. அது சினிமாவுக்காக எடுக்கப்பட்ட போலி திருமண வீடியோ. அதில் இருக்கும் மணப்பெண், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அனிகிரிதி சவுகான். பியார் ஜூக்தா நஹி என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி தான் இது. ஷூட்டிங் நடந்த இடத்தில் இருந்த பெண் ஒருவர் அந்தக் காட்சியை இணையத்தில் பகிரவே அது வைரலாகி இருக்கிறது.




