ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தனித்தனி தாக்குதல் சம்பவங்களில், இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வரும் சூழலில், மறுபுறம் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேசமயம், இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து, எதிரிகளின் முயற்சியை முறியடித்து வருகிறது.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட்டே மற்றும் கிருஷ்ணா காட்டி செக்டார்களில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை ஒட்டி புதன்கிழமை இரவு முதலே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு மற்றும் மோர்டார் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதே போல் குப்வாரா மாவட்டத்தின் நௌகம் செக்டாரிலும் தொடர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும், பூஞ்ச் பகுதியில் ஒரு வீரரும், குப்வாராவில் இரு வீரர்களும் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் அறிவுறுத்தளின் பேரிலேயே, இந்தியாவிற்கு இருபுறத்திலும் இருந்து அழுத்தம் கொடுக்கும் வகையில், போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.