கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக மிகக்கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் கனமழை விடாது பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பி ஆற்றில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மூணாறு அருகே ராஜமலை செல்லும் பகுதியில் பெட்டிமடா பகுதியில், தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னதாக திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர், போலீஸார், பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்ட்டுள்ளனர். நிலச்சரிவு நடந்த பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், மீட்பு வாகனங்கள் செல்லமுடியாததாலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மண்ணில் புதைந்தவர்களில் 12 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நிலச்சரிவில் புதையுண்ட பகுதியில் இருந்து இன்று மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22 பேர் தமிழகத்தில் காயத்தாறு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 21 பேரின் நிலை என்ன ஆனது என தெரியாத நிலையில், அதில் பெரும்பாலானோர் சிறார்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சிறிது தாமதமாகி வருகின்றன.