புதுச்சேரியில் கடலுக்கு அடியில் இருந்து 1 டன் முகக்கவசங்கள் சேகரித்து அகற்றப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி :
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டு முறையான அப்புறப்படுத்துதல் இன்றி தூக்கி ஏறியப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிகளில் கொரோனாவிற்காக அரசு வழிகாட்டுதலின்படி பயன்படுத்தி விட்டு பொதுமக்களால் தூக்கி வீசப்பட்ட முக கவசங்கள் ஆறுகள் மூலமாக அடித்துச் செல்லப்பட்டு கடலுக்கு அடியில் தேங்கிக் கிடப்பது தெரியவந்தது.
புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஸ்கூபா டைவர் அரவிந்த் மற்றும் குழுவினர் வங்கக்கடலில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்காகச் சென்றபொழுது மனிதர்கள் பயன்படுத்திய முகக் கவசங்கள் ஆழ்கடலில் மிதப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்தக் குழு அது தொடர்பான காட்சிகளையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் தேங்கியிருக்கும் முகக் கவசங்களை அகற்றும் பணியிலும் அந்தக் குழுவினர் ஈடுபட்டனர்.
Read more – உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி ? கோட்டாட்சியர் விசாரணையில் புதிய தகவல்
நடுக்கடலுக்கு நீந்திச் சென்ற அரவிந்த் 60 அடி ஆழம் இறங்கி அடியில் தேங்கிக் கிடந்த முகக்கவசங்களை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்ட வீடியோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அரவிந்த் கூறுகையில், கடலுக்கு அடியில் இன்னும் தேங்கி கிடக்கும் முகக்கவசங்களை நான் தொடர்ந்து அகற்றுவேன் என்றும், கடலுக்கு அடியில் இருந்து சுமார் 1 டன் எடைக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை சேகரித்து கரைக்கு கொண்டு வந்து அப்புறப்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.