முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10-ஆம் தேதியிலிருந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கடந்த 10-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், அவருக்கு நடத்தப்பட்டப் பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, உடனடியாக அந்த ரத்தக்கட்டை அகற்றினர்.ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு, அவரின் உடல்நிலை மோசமடைந்து, கோமா நிலைக்குச் சென்றார். எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எனினும், அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாகக் கூறிய மருத்துவமனை நிர்வாகம் கூறியிள்ளது.
இந்நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில், வென்டிலேட்டர் உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவரின் இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சீராக உள்ளன எனக் கூறியுள்ளது.
இதுக்குறித்து, பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், என் தந்தை தொடர்ந்துக் கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும், அவரின் உடல்நிலை மோசமடையவில்லை. வெளிச்சம் பட்டால், அவர் கண்களில் சிறிய முன்னேற்றம் தெரிகிறது, எனப் பதிவிட்டுள்ளார்.