ஆண் அரசு ஊழியர்களுக்கும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ”பிரதமர் மோடியின் தலைமையிலான அரசில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள சில சீர்திருத்தங்களின் அடிப்படையில், ஆண் அரசு ஊழியர்களும், குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஊதியத்துடன் கூடிய குழந்தைகள் கவனிப்பு விடுமுறை (சைல்ட் கேர் லீவ் – சி.சி.எல்.) எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், சி.சி.எல். விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்கள், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தகவல் தெரிவித்து, முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அதன்படி, குழந்தையைக் கவனித்துக்கொள்ள அரசு ஊழியருக்கு முதல் ஆண்டில் (365 நாட்கள்) முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பும், அடுத்த ஆண்டில் 80% ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்படும். மேலும், ஒரு ஊழியர் சி.சி.எல். விடுப்பில் இருக்கும்போதே, எல்.டி.சி. விடுப்பையும் பெற முடியும்.
இதுபோன்ற சீர்திருத்தங்கள், அரசு ஊழியர்கள் முழு கவனத்துடனும், உண்மையுடனும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், அதேசமயம் அரசு ஊழியர்கள் பணியாற்றாமல் இருத்தல், கையூட்டு போன்ற குற்றங்களில் பிடிபட்டால், மத்திய அரசு எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
சி.சி.எல் யாருக்கு?
- மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ இருக்க வேண்டும்.
- அந்தக் குழந்தைக்கு தந்தை மட்டுமே இருத்தல் வேண்டும்.
- விடுப்பு எடுப்பவரின் குழந்தை மாற்றுத்திறனாளியாகவோ அல்லது சிறப்புக் குழந்தையாகவோ இருந்தால் சி.சி.எல். எடுக்கலாம்.
- குழந்தையைக் கவனித்துக்கொள்ள வீட்டில் குடும்ப உறுப்பினர் யாரும் இல்லாத நிலையில் சி.சி.எல். எடுக்கலாம்.




