ஜம்மு பகுதியில் நடப்பாண்டில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான முறை விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கின் எல்லைபகுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக சீனாவுடன் நிலவும் மோதலால், தொடர்ந்து பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலிலும், அவ்வப்போது அத்துமீறும் சீன ராணுவத்தினருக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த சூழலைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டி வருகிறது.
இதன் காரணமாக தொடர்ந்து, எல்லை பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து இதுவரை, பாகிஸ்தான் 3,186 முறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதில், ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஜம்மு பிராந்தியத்தில் இந்தோ – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 242 முறை எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பாதுகாப்பு இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் குறிப்பிட்டார்.
பெரும்பாலான தாக்குதல்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடந்ததாகவும், பாகிஸ்தான் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டபோது , இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் ஸ்ரீபாத்நாயக் தெரிவித்துள்ளார்.