இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தமிழகம் உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அந்தந்த மாநில முதல்வர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இருந்த போதும் நோயின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வந்த பாடில்லை. கடந்த மார்ச் தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி போன்ற இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த நிலையில் சில மாநிலங்களில் கொரோனா தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா தொற்றின் வேகம் தற்போது தான் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் இன்று காலை 10.30 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கொரோனா தடுப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கவுள்ளார்.