கொரோனா தொற்றுக்கு உள்ளான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் விரைவில் குணமடைய பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இதுவரை அமெரிக்காவில் 74 லட்சத்து 94 ஆயிரத்து 671 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து660 பேர் உயிரிழந்துள்ளனர். 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவியிருந்த காலத்திலும் டிரம்ப் முகக்கவசம் இல்லாமல் வலம் வந்தது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்துதல் பணி தொடங்கி விட்டதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் ”எனது நண்பர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா விரைவில் குணமடையவும் நல்ல உடல் ஆரோக்கியம் பெறவும் எனது வாழ்த்துகள்.” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் டிரம்ப் மற்றும் பிடன் இருவருக்கும் முதன்முறையாக நடைபெற்ற நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப் இந்தியா மீது எதிர்மறை விமர்சனங்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.