கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய வேளாண் மசோதாக்களுக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மசோதாக்கள் சட்டமாகியுள்ளன.
வேளாண்துறையில் திருத்தும் ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்களுக்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கடந்த 20 ஆம் தேதி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக்கோரியும் எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை துணைத்தலைவரை முற்றுகையிட்டு, அவை சட்ட விதிகளை கிழித்து எறிந்தனர்.
இதன் காரணமாக, மாநிலங்களவை சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மழைக்கால கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது மட்டுமின்றி, நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு விவசாய அமைப்புகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. பஞ்சாபில் 3 நாட்களுக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களிலும், மசோதாகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் , நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, வேளாண் மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட்டுள்ளதால், வேளாண் மசோதாக்கள் சட்டமாக மாறியுள்ளன. விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேளாண் மசோதாக்களுக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.