ஓடிடி தளங்களில் ஆபாசமான காட்சிகளை கண்காணித்து தடை செய்வதற்கான சுதந்திர அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக, பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு, தணிக்கை கிடையாது என்பதால் ஆபாசமான காட்சிகளும், மோசமான வசனங்கள், மத ரீதியிலான காட்சிகள் என சர்ச்சைகுரிய பல்வேறு விடயங்கள் தொடர்ந்து அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் சார்பிலும் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதால், ஓடிடி தளங்களுக்கும் தணிக்கையை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் இணைந்து தாக்கல் செய்த மனுவில், ஓடிடி தளங்களில் வெளியாகும் வீடியோக்களில் வரம்பு மீறிய வன்முறை, ஆபாச காட்சிகள், அருவருக்கத்தக்க பேச்சுக்கள், புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உரிய கண்காணிப்பு அமைப்பு இல்லாததால், கொச்சையான வசனங்களும், கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான காட்சிகளும் ஓடிடியில் மலிந்து விட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்,யுப் டிவி, ஹங்கமா பிளே. யூ டியூம், முகநூல் உள்ளிட்டவை மீதான குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓடிடி தளங்களில் ஆபாசமான காட்சிகளை கண்காணித்து தடை செய்வதற்கான சுதந்திர அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக, பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.