தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்துள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் பொழுது பட்டாசு வெடிப்பது காரணமாக கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுகிறது என கூறி அதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பண்டிகை தினங்களில் பட்டாசுகளை வெடிக்க கால நேரம் ஆனது உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் பட்டாசு வெடிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும், காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என பட்டாசு வெடிக்கும் நேரத்தை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளைத் தயாரிக்க தயாராக இருக்கிறோம் அதற்கு அனுமதி வேண்டும் எனவும் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தீபாவளி பண்டிகை வர உள்ளதால் இந்த மனு மீது உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பட்டாசு வெடிக்கும் நேரத்தை உயர்த்தக்கூடாது என்றும், பசுமை பட்டாசு தயாரிப்பு என்ற பெயரில் விதிமீறல்கள் நடைபெறுவதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்த பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், ஒரு சிலர் மட்டுமே முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், நிறைய தயாரிப்பாளர்கள் பசுமை பட்டாசு தயாரிப்பிற்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் வேலை இழந்துள்ளதையும் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா, பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை காரணமாக பலர் வேலை இழந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக மக்கள் சுகாதாரமாக வாழ்வதற்காக இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை பறிக்க முடியாது எனக் கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர் செய்யும் தவறால் அப்பாவி மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறிய நீதிபதி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரும் வழக்கின் விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.