பஞ்சாப் மாநிலத்தில், தனது செல்போனை பறித்த திருடனிடம் போராடி சண்டையிட்டு, தனது செல்போனை மீட்டது மட்டுமல்லாமல், அந்தத் திருடனைப் பிடித்து, பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளால், 15 வயதுமிக்க துணிச்சலான சிறுமி. சிறுமியின் துணிச்சலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர்-கபுர்தலா பகுதியில், குசும் குமாரி என்ற 15 வயது சிறுமி, தனது வீட்டிற்கு சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமிக்குப் பின்னால், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரில் ஒருவன், சிறுமி வைத்திருந்த செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளான்.
ஆனால், சுதாரித்துக் கொண்டு, மிகவும் துணிச்சலுடன் செயல்பட்ட அந்த சிறுமி, தனது செல்போனை விட்டுக்கொடுக்காமல், திருடனுடன் போராடியுள்ளார். மேலும், பைக்கில் அமர்ந்திருந்த திருடன் ஒருவனின் சட்டையை பிடித்து கீழே இழுத்து, அவனுடன் சண்டையிட்டுள்ளார். உடனே அந்த திருடன், அருகில் இருந்த கூர்மையான ஆயுதத்தால், சிறுமியை தாக்கியிருக்கிறான். ஆனாலும், போனை விடாமல் திருடனுடன் சண்டையிட்டுள்ளால் அந்தச் சிறுமி.
சிறிது நேரத்தில், அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிச் சென்று, சிறுமியை திருடனிடம் இருந்து மீட்டுள்ளனர். இதனிடையே பொதுமக்கள் வருவதைப் பார்த்த பைக்கில் அமர்ந்திருந்த திருடன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான். ஆனால், செல்போன் பறித்த திருடன் மட்டும், பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டான். அவனை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமியின் இந்த துணிச்சலான செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். சிறுமி அந்த திருடனுடன் போராடும் காட்சிகள் அனைத்தும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அந்த காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதைப் பார்ப்பவர்கள், சிறுமியைப் போன்றத் துணிச்சல், அனைத்துப் பெண்களுக்கும் வர வேண்டும் என்றும், இதுப்போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் அனைவருக்கும், சிறுமி குசும் குமாரி, ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளனர்.