ஆந்திராவில் மர்ம நோயின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலியின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
ஏலூர்:
ஆந்திர மாநிலம் ஏலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், கடந்த ஒரு வார காலமாக மர்ம நோயின் காரணமாக வலிப்பு, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, உலக சுகாதார மையத்தில் இருந்து மருத்துவக் குழுவினர் ஏலூரில் முகாமிட்டு நோய்க்கான காரணம் மற்றும் அதை குணப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏலூர் அரசு பொது மருத்துவமனையில் இதுவரை சிகிச்சைக்காக 593 அனுமதிக்கப்பட்டு அதில் 515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் ஏலூர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதனைத்தொடர்ந்து விஜயவாடா மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக 33 பேர்அனுமதிக்கப்பட்டு அதில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்தநிலையில்,கடந்த 6 ம் தேதி இந்த மர்ம நோயின் தாக்குதலால் ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் சூப்பரவம்மா(56) மற்றும் சந்திரராவ்(50) ஆகிய 2 பேர் பலியாகி உள்ளனர்.பலியானவர்களில் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அதிக அளவில் ஈயம் கலந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துவருகின்றனர்.
அடுத்தடுத்து மர்ம நோயினால் உயிர்கள் பலியாகி வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.