ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மேலும் காலம் தேவைப்படுவதாக மத்திய அரசு கூறியது. மேலும், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு நடப்பண்டிலேயே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது எனவும் மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதால் இட ஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு மனுதாரர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைத் தொடர்ந்து மனுதாரர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.
முன்னதாக, மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.