கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளன, கடந்த மார்ச் 24 முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடற்பயிற்சி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டன.
இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கிட்ட தட்ட 150 நாட்களுக்கு மேலாக விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் திறக்கப்படாமலேயே இருந்தது.இந்த நிலையில் தமிழக அரசு இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 மாதங்களாக மூடியிருந்த பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
அந்தவகையில் பூங்காக்களில் நேற்று மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். பூங்கா வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அங்கு இருந்து அகற்றப்பட்டன. மேலும் பூங்காக்களில் உள்ள சிறுவர்-சிறுமிகள் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்டவையும் சீரமைக்கப்பட்டுள்ளன.
பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்வோர் செல்லும் வழித்தடங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக தரையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்படுவது சிறுவர்-சிறுமிகள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பூங்காக்கள் திறப்பு ஒரு வகையில் சிறுவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் ஆனால் பெற்றோரை அது கதி கலங்கவும் வைத்திருக்கிறது. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘‘பூங்காக்கள் திறந்தாலும் நிலைமை இன்னும் சீரடையவில்லை. இன்னும் கொரோனா பீதி இருக்கத்தான் செய்கிறது. எனவே அடம் பிடிக்கும் குழந்தைகளை பூங்காக்களுக்கு அழைத்துச்சென்று, அவர்களை பாதுகாப்பாக விளையாட வைப்பது எங்களுக்கு பெரும் சிரமம்தான் என பெற்றோர் தரப்பு அச்சம் அடைகின்றனர்.