மரபணு மாற்றப்பட்டுள்ள 75 கோடி கொசுக்கள் வெளியிடத் தயார் நிலையில் உள்ளன.
மழைக்காலம் வந்துவிட்டால், “இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலை” என்று கூறி நாம் படும் அதே அவஸ்தையைத்தான் உலகம் முழுவதும் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமன்றி, டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா போன்ற நோய்களும் கொசுக்கடியின் வழியாகவே ஏற்படுகின்றன. அதைச் சரிக்கட்ட அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் முன்வைத்துள்ள தீர்வுதான் இந்த மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்.
கடந்த மே மாதம், அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பு பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்காவில் செயல்படுகின்ற ஆக்சிடெக் என்ற நிறுவனத்துக்கு மரபணு மாற்றம் செய்த கொசுக்களை உருவாக்க அனுமதி வழங்கியது. ஏடெஸ் எகிப்தி என்ற வகையைச் சேர்ந்த கொசுக்கள், மனிதர்கள் மத்தியில் ஸிகா, சிக்கன்குன்யா போன்றவற்றைக் கொண்டுவருகின்றன. அந்த இனத்தின் ஆண் கொசுக்களிடமே இந்த மரபணு மாற்றப் பரிசோதனையை அவர்கள் மேற்கொண்டனர்.
நம்மைக் கடிக்கின்ற கொசுக்கள் அனைத்துமே பெண் கொசுக்கள்தாம். ஆண் கொசுக்கள் நம் காதுகளைச் சுற்றி ரீங்காரமிட்டு ஒருவித எரிச்சலை உண்டாக்குமே ஒழிய, ரத்தம் குடிக்காது. பெண் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டும். அவை, முட்டைகளை உருவாக்க வேண்டும். அதற்குத் தேவையான புரதச் சத்துக்காக மட்டுமே மற்ற உயிரினங்களிடன் ரத்தத்தை அவை குடிக்கின்றன.
OX5034 என்று பெயரிடப்பட்டுள்ள அவை அனைத்துமே ஆண் கொசுக்கள்தாம். குறிப்பிட்டு ஆண் கொசுக்களை மட்டுமே மரபணு மாற்றம் செய்வதன் மூலம், அவற்றுடைய இனப்பெருக்கச் செயல்முறையையே குலைக்க முடியுமென்று அவர்கள் நம்புகின்றனர். மரபணு மாற்றப்பட்ட ஆண் இனத்தோடு பெண் கொசுக்களுடைய இனப்பெருக்கச் செயல்முறை நிகழ்ந்தால், அதன் மூலம் பிறக்கின்றவை, முட்டையிலிருந்து வெளியாகிப் புழு வடிவத்தில் இருக்கையிலேயே இறந்துவிடும்.
இந்தக் கொசுக்களை ஃபுளோரிடா கீஸ் என்ற ஒரு சிறிய தீவில் முதலில் திறந்துவிடப் போவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதற்குரிய மத்திய மற்றும் மாகாண அரசுகளின் ஒப்புதல்களும் கிடைத்துவிட்டன.
இதற்கு அமெரிக்கா முழுவதுமிருந்து ஆதரவு பெருகிய போதிலும், இதற்கு எதிரான விமர்சனங்களும் கணிசமாக அதிகரித்த வண்ணம் உள்ளன. change.org என்ற இணையதளத்தில் சுமார் 2,40,000 பேர் ஆக்சிடெக் நிறுவனத்துடைய இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கையெழுத்திட்டுள்ளார்கள். அமெரிக்க மாகாணங்களை, ஆக்சிடெக் நிறுவனத்தின் பரிசோதனைக் கூடமாக மாற்றுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்னும் பலர், இதை `ஜுராசிக் பார்க் பரிசோதனை’ என்று விமர்சிக்கின்றனர்.
இயற்கை விதிகளின்படி, நமக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்தலாம், அதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். ஆனால், அதிலிருந்து தப்பிக்க, ஓர் இனத்தையே அழிப்பதென்பது, அறம் அல்ல.