புதுச்சேரியில் தேங்காய்திட்டு துறைமுகம் அருகே படகு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தேங்காய்திட்டு துறைமுகம், அதிக அளவில் வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாகும். இந்த தேங்காய்திட்டு துறைமுகம் அருகே அமைந்துள்ள படகு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் அந்த நிறுவனத்தின் உள்ளே இருக்கும் ரப்பர்கள், டயர்கள், பலகைகள் உள்ளிட்டவைகளில் தீ பிடித்து, கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.
தீயை அணைக்கும் பணியில் எட்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், எனினும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தின் சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணத்தை அறிய, முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.