முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமையில் கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோயில் குலதெய்வமாக உள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் ஆன நிலையில் சிதிலமடைந்த இக்கோயிலின் புணரமைப்பு பணிகள் துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.
இதில், துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை,மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி & அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்கள் கலசங்களுடன் கோயிலை வலம் வந்த நிலையில், துர்கா ஸ்டாலின் பச்சைக்கொடி அசைத்துக் காட்ட சிவாச்சாரியர்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுச்சூழல் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், மாவட்ட ஆட்சியர் லலிதா, எஸ்பி நிஷா மற்றும் அரசு அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.




