மனைவிக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த தனியார் நிறுவன ஊழியர்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி (வயது 32). சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜான்சியின் பெற்றோர் அவரை திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த ஓம்குமார் (34) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததை தொடர்ந்து தன்னுடைய கணவருடன் சென்று அங்கேயே தங்கி குடும்பம் நடத்திவந்தார்.
அவர்களுக்கு 4½ வயதில் ஒரு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் அமெரிக்காவில் இருந்து தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து சொந்த ஊரான திருவள்ளூரை அடுத்த வெள்ளியூருக்கு வந்துள்ளார். இவர்கள் கடந்த 3½ ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
பி.எஸ்சி. பட்டதாரியான ஓம்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பால் வியாபாரமும் செய்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஓம்குமார் தனக்கு விவாகரத்து கேட்டு பூந்தமல்லியில் உள்ள சப்-கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். தற்போது இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓம்குமார் வேண்டுமென்றே பிரபல திருமண தகவல் மையத்தில் தனது மனைவியான ஜான்சிக்கு மணமகன் தேவை என தகவல் தெரிவித்து விளம்பரம் கொடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஆன்லைன் விளம்பரத்தை பார்த்தவர்கள் ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அவரது தந்தையான பத்மநாபனை தொடர்பு கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் இதுபோல் எந்த ஒரு திருமண தகவல் மையத்திலும் விளம்பரம் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
இருப்பினும் தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் விரக்தியடைந்த அவர், தனது பெயரில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவலை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் லில்லி, வழக்குப்பதிவு செய்து விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்ட கணவர் ஓம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.