இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர, இரு நாடுகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த 21-ந்தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்கு மேல் எந்த தரப்பினரும் படைகளை அனுப்பக்கூடாது என முடிவு எடுத்துள்ளது. அதனை தொடர்ந்து எல்லையில் உள்ள படைகளை மீண்டும் திரும்ப பெற திட்டங்கள் தீட்டி வருகின்றனர். இருநாட்டு ராணுவத்துக்கு இடையே நடைபெறும் இந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில் ‘ராணுவ அதிகாரிகள் இடையே கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டது போல, 7-வது சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளில் இரு தரப்பும் ஈடுபட்டு உள்ளன. இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தப்படியும், நடைமுறைப்படியும் எல்லையில் இருந்து விரைவாகவும், முற்றிலுமாகவும் படைகளை விலக்கவும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தவும் முடியும்’ என்று தெரிவித்தார்.