தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், இதுதவிர தொடர்ந்து 3 நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசக்கூடும் என்பதாலும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இன்று, நாளை, நாளை மறுதினம் மற்றும் 4ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.




