காட்டுமன்னார்கோவில் குருங்குடி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காந்திமதி, மலர்கொடி, லதா, ராசாத்தி, சித்ரா, ருக்மணி மற்றும் ரத்தினம்மாள் ஆகிய ஏழு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும், மாண்புமிகு தொழில் துறை அமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.